Thirukural

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். (குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். (இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும். இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப்பொருத்த மில்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று- ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு கூடிவதிந்தாற்போலும். இடச்சிறுமையாலும் உடனுறைவாலும் பாம்பாற் கொல்லப்படுதல் போல், உட்பகையால் அழிவுறுதல் திண்ணமாதலால் அதனொடு கூடி வாழற்க என்பதாம்.உடம்பாடின்மை யென்பது இங்கு அன்பின்மையோடு பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தலையுந் தழுவிய தென்பது ,அதிகாரத்தாற் கொள்ளப்படும், "குடங்க மென்னும் வடசொற் றிரிந்து நின்றது," என்றார் பரிமேலழகர்.அது தென்சொல்லே யென்பதைப் பின்னிணைப்பிற் காண்க.
கலைஞர் உரை:
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) மனப் பொருத்தம் இல்லாத உட்பகை உள்ளவர்களுடன் சேர்ந்திருப்பது சிறு குடிசைக்குள் பாம்போடு வசிப்பதைப்போல் எந்த நிமிடத்திலும் அபாய முண்டாக்கக் கூடியது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உள்ளத்தில் பொருத்தம் இல்லாதவரோடு கூடிவாழும் வாழ்க்கை ஒரு குடிசையினுள்ளே பாம்புடன் கூடிவாழ்வதைப் போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
உள்ளத்தில் உடம்பாடு இல்லாதவருடன் கூடிவாழும் வாழ்க்கையானது ஒரு குடிலில் பாம்போடு சேர்ந்து வாழ்வதற்கு ஒப்பாகும்.
Translation
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company.
Explanation
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
Transliteration
Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul Paampotu Utanurain Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 890