Thirukural

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)
மணக்குடவர் உரை:
உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும். இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை ஒருவனுக்கு, சிறப்பாக அரசனுக்கு, உண்டாகுமாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அது அவனுக்கு இறக்குந் தன்மையான பல குற்றத்தையும் உண்டுபண்ணும். உட்பகையுற்றவன் அரசனாயின், புறப்பகைக்குத் துணையாய் நின்று காட்டிக் கொடுத்தலும் தானேகொல்லுதலும் அமைச்சு முதலிய உறுப்புக்களைக் கெடுத்தலும், உட்பகையால் வரும் ஏதங்களாம்.
கலைஞர் உரை:
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உறவு முறை உள்ளவனாக (எந்த நேரத்திலும் தன் வீட்டுக்குள் வரப்போக) இருக்கக் கூடியவன் உட்பகையாகி விட்டால் உயிருக்கே அபாயம் வரக் கூடிய துன்பங்களும் உண்டாகிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
புறத்தில் உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை வேந்தனுக்கு உண்டாகிவிட்டால் அது அவனுக்கு இறத்தல் முதலிய குற்றங்களையெல்லாம் தந்துவிடும்.
தமிழ்க்குழவி உரை:
உறவுக்குள் உட்பகை தோன்றின் அது ஒருவனுக்கு அழிவைத் தருவதான பல துன்பங்களைத் தரும்.
Translation
Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise.
Explanation
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
Transliteration
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan Edham Palavum Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 885