Thirukural

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
நாணாமை - வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; நாடாமை - ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை -பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம். வெட்கப்பட வேண்டியவை பழிகரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற்பொது.
கலைஞர் உரை:
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(முட்டாள்தனத்தின் அடையாளங்கள் இவைதாம்:) பழி பாவங்களுக்குக் கூசாமை. நன்மை தீமைகளை ஆராயாமை, அன்பில்லாமை, எந்தக் கொள்கையையும் கடைப்பிடித்துக் காரியம் செய்யாமை இவை முட்டாள் நடத்தைகள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நாண வேண்டுவனவற்றிற்கு நாணம் கொள் ளாமையும், நாட வேண்டுவனவற்றை நாடாமையும் யாவரிடத்தும் அன்பில்லாமையும், விரும்பாமையும் பேதைமையினுடைய தொழில்களாகும்.
தமிழ்க்குழவி உரை:
பழிக்கு அஞ்சாமை, நல்லவற்றை விரும்பாமை, உரியவரிடத்தில் அன்பு பாராட்டாமை பேண வேண்டிய வற்றைப் பேணாமை இவை அறிவிலார் செயல்.
Translation
Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his part.
Explanation
Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
Transliteration
Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum Penaamai Pedhai Thozhil

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 833