|
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.)
நலத்தகை நல்லவர்க்கு ஏர்-நற் குணங்களால் தகுதியுடைய நல்ல ஆடவர்க்கும் அழகாவது ; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் மலர் போலுங் கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவிச் சிறப்பன்றோ ?
தான் நுகர்ந்த சிறந்த இன்பத்திற் கேதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு . தவறில்லாதவர்க்கும் புலவி இனிதென்பான் , "நலத்தகை நல்லவர்க்கும் ஏஎர்" என்றான் . அழகு இன்பப் பயனாகிய மனவெழுச்சி . சிறப்பும்மை தொக்கது . ' ஏஎர்' இசை நிறையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆனால் என் காதலர் அப்படி என்னை வேரறுத்துவிட மாட்டார்.) மலர் போன்ற கண்களையுடைய மனைவியின் பிணக்கத்தில் அவளிடம் காதலுள்ள கணவனுக்கும் இன்பமுண்டு. (என் கணவர் என்மீது காதல் உள்ளவர்).
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்குணங்களால் தகுதியுடையவரான தலைவர்க்கு அழகாவது என்னவென்றால், பூப்போன்ற கண்ணினை யுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவி மிகுதியேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்பண்புகள் வாய்ந்த ஓர் ஆடவர்க்கு காதலில் நன்மை தருவது யாதெனில் மலர் போன்ற கண்களுடைய மாதரார் கொள்ளும் ஊடலே ஆகும்.
|
|
Translation
|
|
Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace
|
|
Explanation
|
|
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands
|
|
Transliteration
|
|
Nalaththakai Nallavarkku Eer Pulaththakai
Pooanna Kannaar Akaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|