|
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால்.
இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துனியும் புலவியும் இல்லாயின்-முதிர்ந்த சடைவாகிய துனியும் அளவான சடைவாகிய புலவியும் இல்லாவிடின் ; காமம் கனியும் கருக்காயும் அற்று-காம வின்பம் முறையே நன்றாகப் பழுத்த பழமும் பழுக்காத கன்னற் காயும் போல்வதாம் .
காம வின்பம் ஊடல் , புலவி , துனி என்னும் மூவகைச் சடைவு நிலையிலும் முறையே கன்னற்காய் , பழம், அளியல் என்னும மூவகைப் பதங் கொள்ளும் பழுக்காத கன்னற்காய்ப் பதமும் மிகப் பழுத்த அளியற் பதமும் சுவை யின்றி வலுத்தும் சுவை கெட்டு அளிந்தும் இருக்குமாதலின் ,இடை நின்ற கனிப் பதமே மென்மையும் இனிமையுங் கொண்டு இன்பந் தருவதாம் . ஆதலால் , அளவாக வுப்பமைந்தது போன்ற புலவி நிலையே இனிதான கனி போல் இன்பந் தருவதற் கேற்ற தென்பதாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல்
வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம்
போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிரிவினாலுண்டாகும் வேதனையும் புணரு முன் பிணங்குவதும் இல்லாவிட்டால், காமம் என்பது குழைந்து போன பழத்தைப் போல் சுவை கெட்டுப்போனதும் பச்சைப் பிஞ்சைப் போல் சுவை இல்லாததும் ஆகிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முதிர்ந்த பிணக்காகிய துனியும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லையானால், காமம் அதிகமாகப் பழுத்துவிட்ட கனியும் இளங்காயும் போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறுசிறு கோபமும், சிறுசிறு ஊடலும் இல்லையெனில் காதல் வாழ்க்கை முற்றாத பிஞ்சும், முதிர்ந்த கனியுமாய் பயனற்றதாய்த் தோன்றும்.
|
|
Translation
|
|
Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature
|
|
Explanation
|
|
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit
|
|
Transliteration
|
|
Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|