Thirukural

ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஊடியவரை உணராமை-நும்மொ டூடிய பரத்தை யரை ஊடல் தீர்த்துக் கூடாது விடுதல் ; வாடிய வள்ளி முதல் அரிந்த அற்று - முன்பே நீர் பெறாது வாடிய கொடியை அடியில் அறுத்துவிட்டாற் போலும் . நீர் பரத்தையரோ டிருக்குங்கால் எம் புதல்வரைக் கொண்டாற்றியிருக்கத் தக்கேமாகிய யாம் , நும்மோ டூடுதற் குரியே மல்லேம் . ஆதலால் எம்மை யுணர்த்தல் வேண்டேம் . எம்மினும் நுமக்குரியாரா யூடிய பரத்தையரையே யுணர்த்துதல் வேண்டும் . ஆதலால் அங்கேயே சென்மின் என்பதாம் .
கலைஞர் உரை:
ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிணங்கியிருக்கும் என் பிணக்கத்தைத் தீர்த்து என் காதலர் என்னைப் புணராமல் இருந்துவிட்டால் அது நீரில்லாமல் ஏற்கனவே வாடிப்போயிருக்கிற ஒரு பூங்கொடியை வேரறுத்த மாதிரியாகும். (நான் இறந்தே போவேன்).
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஊடல் கொண்டவரின் ஊடலைப் போக்கி அவரோடு சேராமல் நீங்குவது வாடி நிற்கும் வள்ளிக்கொடியை அடியோடு வெட்டிவிடுதல் போலாகும்.
Translation
To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops
Explanation
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
Transliteration
Ooti Yavarai Unaraamai Vaatiya Valli Mudhalarin Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1304