Thirukural

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.
மணக்குடவர் உரை:
தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
தேவநேயப் பாவாணர் உரை:
(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிணங்கிய என்னை என் காதலர் பிணக்கம் தீர்த்துப் புணராமலேயே இருந்துவிடுவாரானால் மிகவும் நொந்து போயிருக்கிற என்னை இன்னும் நோகச் செய்துவிடுமே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மைப் பெறாமல் புலந்து கொண்டிருக்கும் மகளிரை, அப்புலவி நீக்கி ஆடவர் கலவாதிருத்தல் முன்னமேயே துன்புற்று அலந்தாரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கினது போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஊடல் கொண்டவரின் ஊடலைத் தீர்க்காமல் விடுதலாவது காதல் நோயால் துன்புற்றவரை மேலும் துன்புறுத்துவதாகும்.
Translation
'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace
Explanation
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony
Transliteration
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip Pulandhaaraip Pullaa Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1303