Thirukural

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ ! ' கொல் ' அசைநிலை . ' ஒ ' இரக்கப் பொருளது . " தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . " என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது .
கலைஞர் உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மறுமையைப்பற்றி எண்ணாவிட்டாலும் இம்மை யிலேயே கண்ணாரப் பார்க்கிறோம்.) இனிய வார்த்தைகளால் இனிய பலன்கள் உண்டாவதைத் தினந்தினம் கண்ணுக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனிதன், எதற்காகத் துன்பத்தை உண்டாக்குகிற கடுஞ் சொற்களைப் பேசுகிறானோ தெரியவில்லை!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி?.
தமிழ்க்குழவி உரை:
இனிய சொற்கள் எப்போதும் இனிமையையே தருகின்றன, இதை அறிந்திருந்தும் சிலர் அவ்வப் பொழுது கடுமையான வார்த்தைகளைப் பேசுவது ஏன்?
Translation
Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words?.
Explanation
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.
Transliteration
Insol Inidheendral Kaanpaan Evankolo Vansol Vazhangu Vadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 99