Thirukural

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்குத் தீயன செய்தவர்க்கும் நல்லனவே செய்யாவிடின்; சால்பு என்ன பயத்தது - ஒருவரின் சான்றாண்மையால் என்ன பயனாம் ? வினா எதிர்மறைப் பொருளது, 'ஒ' இரக்கங் குறித்த அசைநிலை. உம்மை இழிவு சிறப்பு. ஏகாரம் பிரிநிலை, சால்பில்லார் போன்றே சால்புடையாரும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வராயின், அவர் சால்பினால் ஒரு பயனுமில்லை யென்பதாம். இவ்வைங் குறளாலும் சால்பின் தன்மை சிறப்பு வகையாற் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சான்றாண்மை மேலும் என்ன செய்யுமென்றால்,) தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் திருப்பித் தீமை செய்யாமல் நன்மையே செய்யாவிட்டால், சான்றாண்மையினால் என்ன பயன்?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனக்குத் துன்பத்தினைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாமற் போனால் அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?
தமிழ்க்குழவி உரை:
தனக்குத் தீமை விளைவித்தாருக்கும் நன்மையே செய்யாவிடில் சால்பு என்னும் பெருமையால் யாது பயன்?
Translation
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.
Explanation
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
Transliteration
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal Enna Payaththadho Saalpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 987