Thirukural

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றச் சிறுமை யுடை யாரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறிவிடுவர். இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் எற்றிக்கூறப்பட்டன. மறைத்தலும் கூறுதலும் ஏனையிடத்தும் இயைந்தன. 'தான்' அசைநிலை. ஏகாரம் பிரிநிலை, இம்முன்று குறளும் வேற்றுமையணி கொண்டு இருசாரார் செயலையும் ஒருங்கு கூறின.
கலைஞர் உரை:
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனுடன்) பெருமைக் குணமுடையவர்கள் பிறருடைய குற்றங்களை மறைத்துக் குணங்களையே பாராட்டிப் பேசுவார்கள். சிறுமைக் குணமுடையவர்கள் பிறருடைய குணங்களை விட்டுவிட்டுக் குற்றங்களை மட்டும் சொல்லித் தீர்த்துவிடுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெருமையுடையவர்கள் பிறருடைய சிறப்பினையே கூறி அவமானத்தை மறைத்து விடுவார்கள். மற்றைச்சிறுமையுடையார் பிறருடைய நற்குணத்தை மறைத்துக் குற்றத்தினையே கூறிக்கொண்டிருப்பர்.
தமிழ்க்குழவி உரை:
பெருமைப் பண்பானது பிறர்தம் குறைகளைப் பெரிது படுத்தாது. சிறுமையோ, பிறரின் குறைகளையே பேசிக் கொண்டிருக்கும்.
Translation
Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim.
Explanation
The great hide the faults of others; the base only divulge them.
Transliteration
Atram Maraikkum Perumai Sirumaidhaan Kutrame Koori Vitum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 980