Thirukural

பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பெருமை என்று பணியும் - பெருமை யுடையோர் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றச் சிறுமை யுடையோர் எக்காலத்துஞ் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர். மாந்தரின் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'என்றும் ' என்பது இரு தொடருக்கும் பொதுவாய் நின்றது. 'ஆம்' ஈரிடத்தும் அசைநிலை.
கலைஞர் உரை:
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உண்மையாகவே பெருந்தன்மையான மனமுள்ளவன் யாரிடத்திலும் பணிவாக நடந்துகொள்வான். பெருமையற்ற சிறுமனம் படைத்தவன் எப்போதும் தன்னைத்தானே புகழ்ந்து மாலை சூட்டிக் கொள்ளுவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெருமையுடையவர்கள் சிறப்பு உண்டான போதும் பணிவுடன் அமைந்து ஒழுகுவார்கள். மற்றைச் சிறுமையுடையார் அது இல்லாதபோதும் தம்மை மெச்சிக் கொண்டு சிறப்பித்துக் கொவ்வர்.
தமிழ்க்குழவி உரை:
பெருமைக்குரியவர்கள் எப்போதும் பணிவுடன் நடந்து கொள்வார்கள், சிறுமைப்பண்புடையவர்களோ, தங்களை வியந்து தாமே பேசிக் கொள்வர்.
Translation
Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with prais
Explanation
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
Transliteration
Paniyumaam Endrum Perumai Sirumai Aniyumaam Thannai Viyandhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 978