|
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும்
பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் .
நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . " கோணே நேர்பாடாயிருந்தான் " ( பாரத . சூது .227 ) . ' பண்பு ' என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் .
|
|
கலைஞர் உரை:
|
|
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத
சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நல்ல எண்ணம் என்பது பிறருக்கு நன்மை வர எண்ணுவது). பிறருக்கு நன்மை உண்டாகும்படி சொல்லுவதன் பண்பு கெடாதபடி இனிய வார்த்தைகள், பேசுகின்றவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கிப் பல நன்மைகளைச் செய்யும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்பயன் விளைவிப்பதாய் அமையும் பண்பார்ந்த இனிய சொற்கள் ஒருவர்க்கு நற்பலன்களையும் நன்மைகளையும் தரும்.
|
|
Translation
|
|
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
|
|
Explanation
|
|
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
|
|
Transliteration
|
|
Nayan Eendru Nandri Payakkum Payaneendru
Panpin Thalaippiriyaach Chol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|