Thirukural

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம். செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆயம் கொளின்- ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின்; ஒளி கல்விச் செல்வம் ஊண் உடை என்று ஐந்தும் அடையாவாம்- அவனைப் பெயர் விளங்கலும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம். அகவுடைமையும் புறவுடைமையும் எல்லாப் பொருள்களும் இல்லாதவனாவான் என்பதாம். சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குப் புதுப்பொருள் வராமையாலும் பழம்பொருள் போய் விடுவதாலும், 'ஐந்தும் அடையாவாம்' என்றார். அரசனாயின், அவன் செல்வம், படை, குடி, நாடு, கூழ், அரண், கருவூலம்,உரிமைச்சுற்றம் முதலியனவாம், 'ஒளி', 'கல்வி' முதலியன செய்யுள் நடைநோக்கி முறைமாறி நின்றன, ஆயம் சூதாட்டு. 'ஐந்தும்' முற்றும்மை. சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குக் கல்வி கற்க நேரமின்மையாலும், ஏற்கனவே கற்றதும் "நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்", என்ற பழமொழிப்படி மறந்து போமாதலாலும், மறவாத ஒழுக்க நெறிமுறைகளும் கைக்கொள்ளப்படாவாதலாலும், அடையாப் பொருள்களுள் கல்வியும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.ஊண்போல் உடையும் இல்லாமற் போவானென்றது பொதுப்பட வறுமை குறித்ததேயன்றி, நளன் நாடிழந்து காடடைந்தபின் ஓதிமத்தை (அன்னத்தை) வளைத்து ஆடையிழந்ததையும், பாண்டவர் தம்மைப் பணையமாக வைத்தாடித் தோற்றுத் தம் மேலாடையிழந்ததையும், குறித்ததன்று.
கலைஞர் உரை:
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நல்ல உடை, நிரம்பிய செல்வம், வயிறார உணவு, நற்குணப் பெருமை, கற்ற கல்வி ஆகிய ஐந்தும் சூதாட்டத்தில் இறங்கியவனுக்கு இருந்தாலும் இல்லாதவை போல அவன் அவற்றின் பயனை அடைய முடியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சூதாட்டத்தினையே ஒருவன் விரும்பி மேற்கொள்ளுவானாகில் அவனிடத்தில் புகழும் கல்வியும் செல்வமும் ஊணும் ஆகிய இவ்வைந்தும் சேராவாம்.
தமிழ்க்குழவி உரை:
உடை, உணவு, செல்வம், புகழ், கல்வி இவை ஐந்தும் சூதாடுகளம் செல்வாரைச் சேராமல் நீங்கும்.
Translation
Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heart.
Explanation
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
Transliteration
Utaiselvam Oonoli Kalviendru Aindhum Ataiyaavaam Aayang Kolin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 939