Thirukural

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.

தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. ('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக- தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மெலியார்மேல் பகை ஓம்பா மேக- மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக. துணைவலியுடைமையால் மெலியார் வலியாராதலும் அஃதின்மையால் வலியார் மெலியாராதலும் உண்மையால், மெலியார் என்னுமிடத்துத் துணைவலியின்மையுங் கொள்ளப்படும். இது பொருட்பாலாதலாலும், "வினையே ஆடவர்க்குயிரே" (குறுந். 135) என்பதாலும் , வணிகர் பொருளீட்டும் வினை போன்றே அரசர் பிறநாடுகளைக் கைப்பற்றச் செய்யும் போர் வினையும் அவர் கடமையாகப் பண்டைக் காலத்திற் கருதப்பட்டதினாலும், "மெலியார் மேல் மேக பகை" என்றார். மேலும், இங்ஙனம் வலியப் போர்க்குச் செல்லுதலோடு, 'எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (தொல். 1008) "மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப" (தொல். 1009) என்ற முறைப்படி வந்த போரை விடாமையும் அவர் கடமையாயிற்று.
கலைஞர் உரை:
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தம்மினும் வலிமை குறைந்தவர்களைத் துன்புறுத்து கிறவனுக்குப் பகைவர்கள் அதிகமாவார்கள். அதனால்) தம்மைவிட மெலிந்தவர்களிடத்தில் தமக்குள்ள பகைமையைக் கொண்டு செலுத்தாமல் தம்மினும் வலிமை மிகுந்தவர்களாகத் தம்மைத் தாக்க வருகிறவர்களை எதிர்த்தடிக்கும் வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மைவிட வலிமையுடையவர்களிடத்தில் பகையாய் இருப்பதை நீக்குதல் வேண்டும். தம்மைவிட மெலியார்களுக்குப் பகையாய் இருப்பதை ஒழியாமல் விரும்புதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
தம்மினும் வலிமை மிக்கவரிடம் பகைமை கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வலிமை குறைந்தவரின் பகையை வென்றெடுக்க வேண்டும்.
Translation
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray.
Explanation
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
Transliteration
Valiyaarkku Maaretral Ompuka Ompaa Meliyaarmel Meka Pakai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 861