Thirukural

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.
தேவநேயப் பாவாணர் உரை:
மாசு அற்றார் கேண்மை மருவுக-மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய நட்பையே பயிலுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக-அறியாமை கரணியமாக உள்ளத்தால் பொருந்தாதவரொடு செய்துகொண்ட நட்பை அவர் விரும்பிய தொன்றைக் கொடுத்தாயினும் விட்டுவிடுக. மாசற்றார் கேண்மை இருமையின்பமும் பயத்தலால் 'மருவுக' என்றும், மாசுற்றார் கேண்மை இருமைத் துன்பமும் விளைத்தலால் "ஒருவுக" என்றும், கூறினார். சிற்றிழப்பாற் பேரிழப்பைத் தடுப்பது அறிவுடைமையேயாதலால், 'ஒன்றீத்து மொருவுக' என்றார். இதனால் கொள்ளுவதும் தள்ளுவதுமான இருவகை நட்புங் கூறப்பட்டன.
கலைஞர் உரை:
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால் நட்புக்களை ஆராய்ந்து பார்த்துக்) குற்றமற்றவர் களுடைய நட்பை விட்டுவிடாமல் அணைத்துக் கொள்ள வேண்டும்; பொருத்தமற்றவர்களுடைய நட்பை ஏதேனும் ஒரு விலை கொடுத்தாவது விலக்கிவிட வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உலகத்தோடு ஒத்து வாழ்கின்ற குற்றமில்லா தவர்களுடைய நட்பினையே செய்தல் வேண்டும். உலகத் தோடு பொருந்துதல் இல்லாதவரது நட்பினை அவர் வேண்டிய தொன்றனைக் கொடுத்தாயினும் விட்டு விலகுதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
குற்றமற்றவர் நட்பைக் கொள்ளல் வேண்டும். தகுதியில்லாதவர் நட்பைத் தவிர்த்தல் வேண்டும்.
Translation
Cling to the friendship of the spotless one's; whate'er you pay. Renounce alliance with the men of evil way.
Explanation
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
Transliteration
Maruvuka Maasatraar Kenmaion Reeththum Oruvuka Oppilaar Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 800