Thirukural

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.)
மணக்குடவர் உரை:
உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.
தேவநேயப் பாவாணர் உரை:
உடுக்கை இழந்தவன் கைபோல-அவையிடை ஆடையவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம்மானக் கேட்டை நீக்குவதுபோல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பு ஆம்-நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து அப்பொழுதே சென்றுதவி அதை நீக்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும். 'ஆங்கே' என்பது உடுக்கை திருத்தற்கும் இடுக்கண் களைதற்கும் பொதுவாக இடையில் நின்றது. விரைந்து நீக்குவதென்பது இவ்வுவமையின் பொதுத்தன்மை. மானங் காத்தற்கண் ஒருவன் கை தன் மனத்தினும் முற்படுமென்னும் பரிமேலழகர் கூற்று, உளநூற்கு ஒத்ததன்று. 'உடுக்கை' தொழிலாகுபெயர்.
கலைஞர் உரை:
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(நல்ல நண்பன் துன்பக் காலத்தில் எவ்விதம் உதவுவான் என்றால்) இடுப்பிலுள்ள ஆடை நழுவி விட்ட ஒருவனுடைய கை அவனறியாமலும் உடனே ஆடையை அணைத்து மானம் காப்பதைப் போல, நண்பனுக்குத் துன்பம் வந்துவிட்டதை அறிந்த அக்கணமே அவன் அறியாமலும் தானே ஓடித் துன்பத்தை நீக்குவதுதான் நட்பாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி செய்து இழிவினை நீக்குவ துபோல நண்பனுக்குத் துன்பம் வந்தபோது அப்பொழுது சென்று உதவிசெய்து அதனை நீக்குவதே நட்பாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஆடை நெகிழ்கின்ற போது கைகள் விரைந்து மானம் காப்பது போல், நண்பனுக்கு துன்பம் வருங்கால் உடனடி சென்று உதவுவதே நல்லநட்புக்கு அடையாளம்.
Translation
As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay.
Explanation
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
Transliteration
Utukkai Izhandhavan Kaipola Aange Itukkan Kalaivadhaam Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 788