|
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நட்பிற்கு வீற்று இருக்கை யாது எனின்-நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால்; கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை-ஒருபோதும் வேறுபடாது இயன்ற வழியெல்லாம் தன் நண்பனுக்குதவி அவன் எவ்வகையிலுந் தளராதவாறு தாங்கும் உறுதியாம். அரியணையில் அரசிருக்கையாகிய வீற்றிருக்கை மக்கட்குள் சிறந்த நிலையைக் காட்டுதலால், நட்பின் சிறந்த நிலை இங்கு வீற்றிருக்கை யெனப்பட்டது. நிலை என்பது நீக்கமும் நிலையும் (திருவாசகம், 3:9) என்பதிற்போல உறுதியென்னும் பொருள் கொண்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட உதவிகளைச் சலிப்பின்றி அவசியம் எற்பட்ட போதெல்லாம் செய்வதே சிறந்த நட்பு.) சிநேகம் என்பதற்குச் சிறப்பான இருப்பிடம் எதுவென்றால், மனங்கோணாமல் அவசியமான போதெல்லாம் உதவி புரிந்து, தாங்கி நிற்கும் தன்மைதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நட்பானது சிறப்பாக வீற்றிருக்கும் இடம் எதுவென்றால் அது எப்போதும் மாறுபாடு இல்லாமல் முடிந்த இடங்களில் எல்லாம் தளராமையினைத் தாங்கும் திண்மையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நட்பு மகிழ்ந்து அமர்ந்திருக்கும் அரியாசனம் யாதெனில் எந்த மாறுபாடும் இன்றி இயலும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் பண்பே ஆகும்.
|
|
Translation
|
|
And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.
|
|
Explanation
|
|
Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
|
|
Transliteration
|
|
Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri
Ollumvaai Oondrum Nilai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|