Thirukural

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம்.குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.).
தேவநேயப் பாவாணர் உரை:
இதற்கு ஈருரைகள் உள. (1) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித்துணையாகக் பெற்றால்; முகம் நோக்கி நிற்க அமையும்-அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே நின்றாற் போதும்; தன் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லவேண்டியதில்லை. அவர் தாமாகச் செய்தியை அறிந்து கொள்வார். (2) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறை வேண்டுவான், தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் உற்ற குறையை யுணர்ந்து அதைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர்தன் முகம்நோக்கும் எல்லையில் தானும் அவர் முகம் நோக்கி நின்றாற்போதும். இது பரிமேலழகருரையைத் தழுவியது. இவ்வதிகாரம் அரசரைச் சார்ந்து ஒழுகுபவர் அவர் குறிப்பறிதலைப் பற்றியதாதலாலும், குறையுறுவான் செய்தி'இரவு' அதிகாரத்திற்கே ஏற்றதாதலாலும், இப்பொருட்கு 'உணர்வார்' என்னுஞ் சொற்கு வழிநிலை வினைப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதனாலும், இவ்வுரை முன்னது போற் சிறந்ததன்றாம் . இம் மூன்று குறளாலும் குறிப்பறிதற்கு முகங் கருவியென்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒருவனுடைய முகம் அவனுடைய மனம் இன்பப் படுவதையோ துன்பப்படுவதையோ காட்டுவதைத் தொடர்ந்து) ஒருவனுடைய உள்ளத்தை ஊகித்தறிந்து விடக்கூடிய தனித்திறமை உள்ளவர்கள் அவனுடைய முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தால் அதுபோதும் குறிப்பறிய!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து குறைநீக்க வல்லாரைப் பெற்றால் அவர்தம் முகம் நோக்கும் வகையில், தானும் அவர் முகம் நோக்கி நிற்க அமையும்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் மனவோட்டங்களைத் தெள்ளிதின் தெரிந்துக் கொள்வோரைத் துணையாகக் கொண்டால், அவர் முகம் நோக்கியே பலவற்றை அறிந்து கொள்ளலாம்.
Translation
To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought.
Explanation
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
Transliteration
Mukamnokki Nirka Amaiyum Akamnokki Utra Thunarvaarp Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 708