Thirukural

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உவப்பினும் காயினும் தான் முந்து உறும்-ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், வெறுத்துச் சினந்தாலும், தான் அவற்றை முன்னறிந்து அவற்றைப் பிறர்க்கு அறிவிப்பதில் வாயினும் முற்பட்டு நிற்றலால்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகத்தைப்போல் அறிவுமிக்க வேறு வுறுப்பு ஏதேனும் உண்டோ? இல்லை. ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அவர் வாய்திறந்து சொல்லுமுன், அவர் முகமே முறையே மலர்ந்தும் சுருங்கியும் தெரிவித்து விடுதலால் ,'முகத்தின் முதுக் குறைந்ததுண்டோ' என்றார். இங்கு முந்துறுதற் போட்டி முகத்திற்கும் வாய்க்கும் இடைப்பட்டதாம். முது=முதுமையால் உண்டாகும் அறிவு, அறிவு. முது-முதுக்கு. ஒ.நோ: மெது-மெதுக்கு. முதுக்கு உறைதல்=அறிவு தங்குதல், அறி்வடைதல். உவப்பான் காய்வான் இயல்புகள் அவர் முகத்தின்மேல் ஏற்றப்பட்டன. உணர்வான் செயல் அவன் கண்ணின்மேல் ஏற்றப்பட்டதுபோல்(705.)
கலைஞர் உரை:
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(உள்ளத்தில் உள்ளதையெல்லாம் முகம் காட்டாவிடினும் அப்போது மனத்தில் மிகுந்துள்ளது இன்பமாதுன்பமா என்பதையாவது நிச்சயமாகக் காட்டிவிடும்.) முகத்தைக் காட்டிலும் மனத்தை அறியக்கூடிய அங்கம் வேறு உண்டா? மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் வருத்தம் அடைந்தாலும் அதை முகந்தான் முதலில் (அறிந்து) காட்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயிரானது ஒருவனை விரும்பினாலும், வெறுத்தாலும், முகம் தான் அறிந்து முற்பட்டு நின்று உணர்த்தும். ஆதலால், முகத்தினைப் போல அறிவு மிக்கது வேறு ஒன்று இருக்கின்றதோ? (இல்லை என்பதாம்.)
தமிழ்க்குழவி உரை:
ஒருவருடைய விருப்பத்தையும் வெறுப்பையும் அவருடைய முகம், முந்திக்கொண்டு வெளிப்படுத்தும், அதனினும் அறிவார்ந்த உறுப்பு வேறு யாதும் இல்லை.
Translation
Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still!.
Explanation
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
Transliteration
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum Kaayinum Thaanmun Thurum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 707