Thirukural

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆன்ற பெரியாரகத்து- வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது ; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர்காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிடுக. 'சேர்ந்த நகை' என்றதனால் பிறரொடு கூடிச் சிரித்தலும் அடங்கும். செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் தம்மைப்பற்றியே நிகழ்ந்தனவாகக் கருதிக் கடுஞ்சினங் கொள்ளின் அன்றே அழித்துவிடும் ஆற்றலராதலின், 'ஆன்ற பெரியார்' என்றும் 'அவித்தொழுகல்' என்றும்,கூறினார்.
கலைஞர் உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனுடன்) மிகவும் மதிக்கத் தகுந்த அரசனுக்கு அருகில், பிறருடன் காதோடு இரகசியம் பேசுவதும் அதை யொட்டிக் கலகலத்துச் சிரிப்பதும் அடியோடு நீக்க வேண்டியவை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஆன்ற பெரியோர்கள் அருகில் தாம் இருக் கும்போது அவருக்குத் தெரியுமாறு ஒருவருக்கொருவர் காதிலே சொல்லுவதும், ஒருவரி முகம் நே ாக்கி மற்றவர் சிரித்துக் கொள்ளுவதும் நீக்கி நடந்து கொள்ளுதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
பெரியவர்கள் குழுமியிருக்கும் அவையில் ஒருவருக் கொருவர் காதோடு காது பேசிக் கொள்வதையும் சேர்ந்து சிரித்து மகிழ்வதையும் தவிர்த்தல் வேண்டும்.
Translation
All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess.
Explanation
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
Transliteration
Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal Aandra Periyaa Rakaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 694