|
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆதும் என்னும் அவர் -யாம் மேன்மேல் உயர்வேம் என்னும் உயர்வெண்ணங் கொண்டவர்; ஓளி மாழ்கும் செய்வினை ஓதல் வேண்டும் - தம் மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செய்யாது விட்டுவிடுதல் வேண்டும். மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செய்பவர் மேன் மேலுயர முடியாது என்பது கருத்து. ஓவுதல் என்பது ஓதல் எனக் குறைந்து நின்றது. 'ஒளிமாழ்குஞ் செய்வினை' ஒளி மாழ்குவதற் கேதுவாகச் செய்யும் வினை என்க. 'ஓஒதல்' , 'ஆஅதும்', என்பன இசைநிறை யளபெடைகள். ஒளியென்பது உடலோடு கூடி வாழும் நாளில் உளதாகும் நன்மதிப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மேலும் மேலும் சிறப்படைய விரும்புகின்றவர்கள், உள்ள சிறப்பையும் அழித்துவிடக் கூடிய காரியங்களை விலக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'மேலாகக் கடவோம்' என்று நினைப்பவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவதாகிய தமது புகழினைக் கெடுக்கின்ற தொழில்களைச் செய்வதை விடுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வில் மேம்பட வேண்டும் என்னும் விருப்பம் உள்ள ஒருவர் புகழ்தராத எந்த செயலையும் செய்ய முன்வரக் கூடாது.
|
|
Translation
|
|
Who tell themselves that nobler things shall yet be won
All deeds that dim the light of glory must they shun.
|
|
Explanation
|
|
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).
|
|
Transliteration
|
|
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|