Thirukural

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.

விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அடுக்கி வரினும் - இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும்; அழிவு இலான் -மனங் கலங்காதவன்; உற்ற இடுக்கண் இடுக்கண் படும் -அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம். துன்பம் துன்பப்படும் என்பதில் ஆட்படையணி குறிப்பாக அமைந்துள்ளது. அடுக்குதல் என்பது ஒருவகைத் துன்பமும் பல வகைத்துன்பமும் தழுவும்.
கலைஞர் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதற்கென்று தனி முயற்சி செய்யாமலும்) மனங் கலங்காத இயல்புடையவனுக்கு அடுக்கடுக்காகப் பல துன்பங்கள் வந்தாலும், அத்துன்பங்கள் ஒன்றை யொன்று துன்பப்படுத்திக் கொள்ளுமே யல்லாமல் அவனை ஒன்றும் செய்யமாட்டா.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இடைவிடாமல் துன்பங்கள் மேன்மேல் வந்தாலும், தன் மனத்தில் உள்ள கோட்பாட்டினை விடாதவனிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பப்படும்.
தமிழ்க்குழவி உரை:
அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்துற்ற போதும் அவைகண்டு கலங்காத ஒருவனுக்கு வந்துற்ற துன்பங்களே துன்பப்பட்டு விலகி விடும்.
Translation
When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart.
Explanation
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
Transliteration
Atukki Varinum Azhivilaan Utra Itukkan Itukkat Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 625