Thirukural

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைக்கு உரிமை நாடிய பின்றை - அரசன் ஒருவனை ஒருவினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின் ; அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அவ்வினைக்கு முழுவுரிமையும் உடையவனாகச் செய்க. 'வினைக்குரிமை நாடிய பின்றை' என்றது வினைவகையான் வேறாகு மாந்தனன்மை யறிந்தபின் என்பதாம் . அதற்குரியனாகச் செயல் என்றது அரசன் அதில் தலையிடாதிருத்தலை . தலைசிறந்த ஆற்றலும் தன்மானமுமுள்ள வினைத்தலைவரின் வினையில் தலையிடுவது . தெளிந்தான்கண் ஐயுறவு போல் தீங்கு விளைக்கு மாதலின் , அது தகாதென்றார் . அரசன் ஒருவனது வினையை மறைவாகக் கவனித்து வருவதுவேறு ; அதில் வெளிப்படையாகத் தலையிடுவது வேறு . ஒரு தகுந்த வினைத்தலைவனது வினையில் அரசன் தலையிடாது முழுப்பொறுப்பையும் அவனிடம் விட்டு விட்டால் , அவன் மகிழ்ச்சியும் பெருமையும் ஊக்கமுங் கொண்டு அதை முழுவெற்றியாகச்செய்து முடிப்பான் என்பது கருத்து.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காரியத்தைச் செய்யத் தகுதி உள்ளவன் என்று அறிந்த பின் அந்தக் காரியத்துக்கு அவனையே பொறுப்பாளியாக்கிவிட வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனை ஆராய்ந்தறிந்து தனது தொழி லுக்கு உரியவனாகத் துணிந்த பிறகு அவனை அத்தொழிலுக்கு உரியவனாக உயரச் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
செயற்குரியவனாக ஒருவனை ஆய்ந்து தேர்ந்த பின்னர் அவனை அதற்கு பொறுப்பாளனாக நியமித்தல் வேண்டும்.
Translation
As each man's special aptitude is known, Bid each man make that special work his own.
Explanation
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
Transliteration
Vinaik Kurimai Naatiya Pindrai Avanai Adharkuriya Naakach Cheyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 518