Thirukural

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)'
மணக்குடவர் உரை:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல் ; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம் . காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல் . 'தீராமை 'என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும் . வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒரு போதும் நீங்கா தென்பது கருத்து .
தேவநேயப் பாவாணர் உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
கலைஞர் உரை:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அரசர் பகைவரை வெல்ல மட்டுமல்ல. எந்தக் காரியத்துக்கும் பருவகாலம் உண்டு.) பருவகாலத்தை அறிந்து அந்தந்தக் காரியத்தை அதனதன் பருவகாலத்தில் செய்யத் தெரிவது, செல்வம் தம்மை விட்டு நீங்கிவிடாமல் இருக்கச் செய்கிற உபாயம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காலத்தோடு பொருந்த தொழில்செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும்.
தமிழ்க்குழவி உரை:
தக்க காலம் அறிந்து ஒருவன் தன் பணிகளைச் செய்வானாயின், அப்பண்பு அவனுடைய செல்வத்தை நீங்காமல் கட்டிக் காத்திடும் கயிறாக அமையும்.
Translation
The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid.
Explanation
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
Transliteration
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith Theeraamai Aarkkung Kayiru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 482