Thirukural

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை ; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்-எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை. இருள் என்பது அகவிருளாகிய மயக்கம். புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத்தீய அறிவு காரறிவெனப்பட்டது. 'என்னும்' என்பது ஈரிடத்தும் 'ஆகிய' என்னும் பொருளது. ஒளியுடன் இருள்பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.
கலைஞர் உரை:
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தம்முடைய சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ற) அளவோடு வாழ்க்கை நடத்தக்கூடிய மனவலிமை உள்ளவர்களிடத்தில் இருட்டு அறிவான திருட்டுப் புத்தி இருக்காது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
களவு என்று சொல்லப்படுகின்ற மயக்கமான அறிவானது, உயிர் முதலியவற்றை அளத்தல் ஆகிய தவம் என்னும் பெருமையினை விரும்பினவர்களிடத்தில் இல்லை.
தமிழ்க்குழவி உரை:
வரவுக்கேற்ப வாழ்ந்து பழகிய தன்மையுடையவர் களிடத்தில், 'களவு' செய்து வசதியைப் பெருக்கும் புல்லறிவாண்மை தோன்றுவதே இல்லை
Translation
Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won.
Explanation
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.
Transliteration
Kalavennum Kaarari Vaanmai Alavennum Aatral Purindhaarkanta Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 287