Thirukural

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம். ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலினின்னாது' என்றார். 'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல் . 'நிரப்பிய' செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.
கலைஞர் உரை:
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஈகைக் குணத்துக்கும் பெருஞ் செல்வம் வேண்டுமென்பதில்லை) பிச்சை எடுக்கும் இழிவான நிலைமையுள்ளவனுக்கும்இன்னும் இழிவான நிலைமையை உண்டாக்கக்கூடியது எதுவென்றால், அவன் நெடுந்தெருக்களில் வீடுதோறும் பிச்சையெடுத்துநிரம்பக் கிடைத்த உணவிலும், இன்னொருவனுக்குக் கொஞ்சம் கொடுக்காமல் அத்தனையையும் தானே உண்பதுதான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நிறையச் சேர்த்து வைத்துத் தாமே உண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடத்தில் சென்று யாசிப்பதனைவிடத் துன்பம் தருவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
தான் ஈட்டிய பொருளைத் தான் மட்டுமே துய்த்து வாழுத் தன்மை, ஒருவர்க்கு இரத்தலைக் காட்டிலும் இழிவானது ஆகும்.
Translation
They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread!.
Explanation
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
Transliteration
Iraththalin Innaadhu Mandra Nirappiya Thaame Thamiyar Unal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 229