Thirukural

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சாதலின் இன்னாதது இல்லை-ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக்கடை இனிது-அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம். ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப்படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. "ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன எட்டிமரம்; காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன" என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. 'இனிததூஉம்' இன்னிசை யளபெடை.
கலைஞர் உரை:
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
சாலமன் பாப்பையா உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாமல் வாழ்ந்த ஒருவன் இறந்துவிட்டாலும்) சாவைக்காட்டிலும் துக்கமுண்டாக்கக் கூடிய சேதி வேறொன்றுமில்லை. ஆனால் ஈகைக் குணம் இல்லாத வனைப் பற்றிய அந்தச் சேதிகூட கேட்பவர்களுக்கு இன்ப முண்டாக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சாதல் போலத் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சாதலும், வறியவர்களுக்குக் கொடுக்க முடியாதபோது இன்பம் தருவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
சாதல் துன்பகரமானதே, ஆயினும் வறியவர்க்கு ஒரு பொருள் வழங்க இயலாத நிலையில் இறத்தலும் இன்பமாகுமோ?
Translation
'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give!.
Explanation
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.
Transliteration
Saadhalin Innaadha Thillai Inidhadhooum Eedhal Iyaiyaak Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 230