Thirukural

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்-வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ! அறிந்தாராயின், தாம்வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பெருஞ் செல்வம் கிடைத்தும்) தம்முடைய செல்வத்தை யெல்லாம் அப்படியே விட்டுவிட்டு உயிரிழந்து போகிறவர்கள் ஏழை களுக்குக் கொடுத்து அவர்களுக்கும் தமக்கும் மகிழ்ச்சியுண்டாக்கும் இன்பத்தை அறிவதில்லையே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஈதலினைச் செய்யாமல் தம்முடைய பொருளினைப் பத்திரமாக வைத்து இழந்துவிடுகின்ற இரக்கமற்றவர்கள், வறியவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழ்வதனால் தமக்கு வரும் இன்பத்தினை அறியமாட்டார்களோ?.
தமிழ்க்குழவி உரை:
பொருளைச் சேர்த்துவைத்துப் பின் ஒருநாள் யாவும் இழக்கத்தலைப்படும் மாந்தர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதால் தோன்றும் இன்பத்தை அறிய மாட்டார்களோ?
Translation
Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.
Explanation
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.
Transliteration
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai Vaiththizhakkum Vanka Navar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 228