|
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்.
இஃது இடார் இழப்பரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்-வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ!
அறிந்தாராயின், தாம்வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. 'கொல்' ஐயம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்
அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி
மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பெருஞ் செல்வம் கிடைத்தும்) தம்முடைய செல்வத்தை யெல்லாம் அப்படியே விட்டுவிட்டு உயிரிழந்து போகிறவர்கள் ஏழை களுக்குக் கொடுத்து அவர்களுக்கும் தமக்கும் மகிழ்ச்சியுண்டாக்கும் இன்பத்தை அறிவதில்லையே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஈதலினைச் செய்யாமல் தம்முடைய பொருளினைப் பத்திரமாக வைத்து இழந்துவிடுகின்ற இரக்கமற்றவர்கள், வறியவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழ்வதனால் தமக்கு வரும் இன்பத்தினை அறியமாட்டார்களோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருளைச் சேர்த்துவைத்துப் பின் ஒருநாள் யாவும் இழக்கத்தலைப்படும் மாந்தர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதால் தோன்றும் இன்பத்தை அறிய மாட்டார்களோ?
|
|
Translation
|
|
Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.
|
|
Explanation
|
|
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.
|
|
Transliteration
|
|
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|