|
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.
இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.
குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே".(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.
|
|
கலைஞர் உரை:
|
|
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு
வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எதைக் கொடுத்தாலும்) இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தான் ஈகை. மற்ற எல்லாம் பிரதிப்பிரயோசனத்தை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளவை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வறுமையில் உழல்வாருக்கு வழங்கி மகிழ்வதே ஈகை. மற்றவர்க்குக் கொடுத்து உதவுதல் என்பது பயனை எதிர்பார்த்துச் செய்வதே ஆகும்.
|
|
Translation
|
|
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
|
|
Explanation
|
|
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
|
|
Transliteration
|
|
Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|