|
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து.
கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின்; விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியுடையதாம்.
ஒப்புரவினால் வருங்கேடு, ஒருவராலும் பழிக்கப்படாமல் இவ்வுலகிற் புகழும் மறுமைக்கு அறமும் விளைத்தலால், ஒரு சிறந்த பேறேயன்றி இழப்பன்று என்பதாம். அப்பேற்றின் சிறப்பை மிகுத்துக் காட்டற்கே தன்னை விற்றுங் கொள்ளத்தக்க தென்றார்.
"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை யரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசா லோங்குபுக ழொரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே".
என்னும் புறப்பாட்டு (127) ஆய்வள்ளல் ஒப்புரவினால் அடைந்த பொருட்கேட்டைத் தெரிவிப்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்
கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்
கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிறருக்கு உபகாரம் செய்வதனால் வறுமையே வருமென்றாலும் அப்படிப்பட்ட வறுமையை விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்வதில் நன்மையுண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒப்புரவு செய்வதால் கேடு வரும் என்று. சொல்லுபவர்கள் இருப்பார்களேயானால், அப்படிப்பட்ட கெடுதி ஒருவன் தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதி யினை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறருக்குதவி வாழ்ந்து, அதனால் வறுமை வரும் எனில் அவ்வறுமை கூட தன்னை விற்றேனும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவே அமையும்.
|
|
Translation
|
|
Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.
|
|
Explanation
|
|
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.
|
|
Transliteration
|
|
Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan
Vitrukkol Thakka Thutaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|