Thirukural

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கடன் அறி காட்சியவர் - கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார். வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன்கொண்டு ஒப்புரவாற்றியது, இதற்கோரெடுத்துக்காட்டாம்.
கலைஞர் உரை:
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனிதப் பிறவியின் கடமைகளை அறிந்தவர்கள் பிறருக்கு உபகாரம் செய்யச் செல்வமுள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை) கடமையை உணரும் அறிவுடையவர்கள் செல்வம் இல்லாவிட்டாலும் உபகாரம் செய்யப் பின்வாங்க மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறிவுடையவர்கள், செல்வம் சுருங்கிய காலத்தி லும் ஒப்புரவு செய்வதற்குத் தளர மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
பிறருக்குதவி வாழ்வதையே கடமையாகக் கொண்டொழுகும் மாந்தர் வறுமையுற்ற போதும் தன் நிலையிலிருந்து தாழ்வதில்லை.
Translation
E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true.
Explanation
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
Transliteration
Itanil Paruvaththum Oppuravirku Olkaar Katanari Kaatchi Yavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 218