Thirukural

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒப்புரவின் நல்ல-ஒப்புரவு போன்ற நல்ல செயல்களை; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் - தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல்; அரிதே - அரிதேயாம். அரிது என்னும் சொல், தேவருலகத்தை நோக்கின் இன்மைப்பொருளும், இவ்வுலகத்தை நோக்கின் அருமைப் பொருளும், தருவதாம்.ஏனெனின், தேவருலகத்தில் ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மையர்; இவ்வுலகத்தில் ஒப்புரவு செய்வார் விரல்விட்டெண்ணவும் வேண்டாத ஒரு சிலரே. ஏகாரம் தேற்றம். ' பிற ' அசைநிலை.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய "ஒப்புரவு" என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
சாலமன் பாப்பையா உரை:
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தேவலோகத்திலானாலும் பூலோகத்திலானாலும் பரோப காரம் செய்யும் குணத்தைவிட மேலானது வேறு ஒன்றுமில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
புத்தேள் உலகத்திலும் இவ்வுலகத்தில் ஒப்புரவு போல (பிறர்க்கு உதவி செய்தல் போல) நல்ல பிற செயல்களைப் பெறுதல் அரிதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பிறருக்கு உதவி செய்து, தாழக் கிடப்பாரைத் தற்காத்து வாழும் உயர்பண்பை தேவர்கள் உறையும் வானுலகிற்கூட காண்பதரிதாகும்
Translation
To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below.
Explanation
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
Transliteration
Puththe Lulakaththum Eentum Peralaridhe Oppuravin Nalla Pira

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 213