|
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங்
கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன்
இறந்தவனே ஆவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறருடைய துன்பங்களைக் கண்டாலும் மனம் இரங்காதவர்கள் இருக்கிறார்களே) தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களே மற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவி செய்கிறவன் தான் உயிருள்ள மனிதன். அந்த உணர்ச்சி இல்லாதவன் செத்த பிணத்துக்கே ஒப்பானவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் கருதி உதவி வாழும் ஒருவரே உண்மையில் உயிர்வாழ்பவர். மற்றவர் செத்தவருள் ஒருவராகவே கருதப்படுவர்.
|
|
Translation
|
|
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
|
|
Explanation
|
|
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
|
|
Transliteration
|
|
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan
Seththaarul Vaikkap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|