|
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப் பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக,
இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.
'பின் ' ஆகு பொருளது. சொல்வான் செயல் சொல்லின் மேலேற்றப் பட்டது. இதில் வந்துள்ளது முரணணி.
|
|
கலைஞர் உரை:
|
|
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில்
இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கோள் சொல்லுவது அப்போதைக்கு நன்மையுண்டாக்குவது போலத் தோன்றினாலும் பின்னால் சொல்லுகிறவனுக்கே கேடுண்டாக்கும்) ஒருவனுக்கு முன்னால் நின்று, அவனைத் தாட்சிண்ய மில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒருவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரக்கூடிய தீமைகளை எண்ணிப் பார்க்காமல் அவன்மீது கோள் சொல்லக் கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்யமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவரைக் கண்ணெதிர் காணுங்கால் கடுமையாகப் பேசினாலும், அவர் அருகில் இல்லாத போது பழித்துப் பேசுதல் தவறாகும்.
|
|
Translation
|
|
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
|
|
Explanation
|
|
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
|
|
Transliteration
|
|
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|