|
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.
இறந்தவழிப் புறங்கூறலின்மையால் ' அறங் கூறும் ஆக்கத்தரும்' என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. ' அறம்' ஆகு பெயர். தரும் என்னும் சொல்.
"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த".
(512)
என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க்கையில் வந்ததினால், இடவழு வமைதியாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப்
புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிக் கோள் சொன்னால்தான் உயிர் வாழலாம் என்ற நிலைமை ஏற்பட்டால்) கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதைவிடச் செத்துப் போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தையாவது உண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புறம் பேசிப் பொய்ம்மையான வாழ்க்கையில் வாழ்வதைவிட அது செய்யாமல் இறந்துவிடுதல், அறநூல்களில் சொல்லப்படுகின்ற நற்பயனை அவனுக்குத் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் நேரில் இல்லாதபோது பழித்துப் பேசியும், நேரில் காண்கின்றபோது நகைத்துப் பேசியும் பொய்யாக போலியாக உயிர் வாழ்தலைவிட 'சாதல்' அறவழிப்பட்ட ஆக்கத்தைத்தரும்.
|
|
Translation
|
|
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
|
|
Explanation
|
|
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
|
|
Transliteration
|
|
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|