Thirukural

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை:
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும். முடிவு பொருளிழந்தாராலும் அரசனாலும் நேர்வது. "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியமை காண்க (சிலப். 20 - 64). வெற்றி வெஃகுவார் எல்லார் மீதும் ஆசை மீதுங்கொண்டது.
கலைஞர் உரை:
விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) ஆலோசனை செய்யாமல் பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசை கொண்டால், உள்ள செல்வமும் அற்றுப் போகும். அபகரித்து வரும் செல்வத்தை வேண்டாமென்று விலக்கிவிடுதலே வெற்றி தரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண்டாமை என்கின்ற செல்வத்தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் பொருள் விழையாத பேராண்மை வெற்றியைத் தரும். அறநிலை பிறழ்ந்து பிறர்பொருள் வெஃகின் அழிவே நேரும்.
Translation
From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.
Explanation
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
Transliteration
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum Ventaamai Ennunj Cherukku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 180