Thirukural

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.
தேவநேயப் பாவாணர் உரை:
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின். 'விளைவயின்' வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கருணை வாழ்க்கையுடன் இல்லறம் கெட்டுப் போவது மட்டுமன்றி) பிறருடைய பொருளைக் கவர்ந்து வருவதாகிய செல்வத்தை விரும்பக்கூடாது. ஏனெனில், அப்படிவரும் செல்வத்தின் பயனாக ஒருவனுடைய செல்வ நிலை உயர்ந்து விடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருப்பார்களாக; அப்படிக் கவர்ந்ததால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது.
தமிழ்க்குழவி உரை:
எந்தச் சூழலிலும் பிறர் பொருளைக் கவர்ந்திட நினைத்தலாகாது. அதன் விளைவுகள் தீவினை பயப்பதாய் அமையும்.
Translation
Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.
Explanation
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
Transliteration
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin Maantar Karidhaam Payan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 177