Thirukural

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமைபோற்றி யொழுகப் படும்.

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
தேவநேயப் பாவாணர் உரை:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும். பொறையுடைமை யின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு . படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம்.
கலைஞர் உரை:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நிறைகுணம் உள்ளவன் என்ற பெருமை நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் பாதுகாத்து அதற்கிணங்க நடந்துகொள்ள வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு நிறையுடைமை என்கின்ற சான்றாண்மைக் குணம் தன்னிடமிருந்து நீங்காதிருக்க வேண்டுமானால், அதனால் பொறுமை என்கின்ற குணம் அழியாமல் காப்பாற்றப் படவேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவர் தன்னுடைய உயர் பண்புகள் தன்னை விட்டு அகலாதிருக்க வேண்டுமென விரும்புவாரேல், அவர் பொறுமைப் பண்பினைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.
Translation
Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain.
Explanation
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
Transliteration
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai Potri Yozhukap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 154