Thirukural

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)
மணக்குடவர் உரை:
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - ஆனால் அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர். தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனை யொத்தலின் , 'ஒன்றாக வையார்' என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தீங்குக்குத் தீங்கு திருப்பிச் செய்து விடுகிறவனைக் குறிப் பிடத் தகுந்த ஒரு மனிதனாக யாரும் மதிக்கமாட்டார்கள். ஆனால் தீங்கு செய்தவனையும் மன்னித்துவிடுகிறவனை, மிகவும் குறிப்பிடத் தக்கவனாக மதித்து அவனுடைய பொறுமைக் குணத்தை எல்லோரும் தம்முடையை மனத்தில் போற்றி வைப்பார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறன் தமக்குத் தீமை செய்தால் பொறுமை இழந்து, தண்டித்தவர்களைப் பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்திற் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக்க கொண்டவர்களை எப்போதும் நினைத்து மனத்தில் பொன்போல் கொள்ளுவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
தனக்குத் தீங்கிழைத்தவர்பால் வெகுண்டு தண்டிப்பவர் களை எவரும் ஒரு பொருட்டாகக் கருதார். ஆனால் மன்னித்து விடுபவர்களைப் பொன்போல் போற்றுவர்.
Translation
Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.
Explanation
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
Transliteration
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar Poruththaaraip Ponpor Podhindhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 155