Thirukural

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் ; பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறனாட்சிக் குட்பட்டவளின் பெண்டன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம். இக்குணம் அவன் குற்றங்களை ஓரளவு மறைக்கும் என்பது கருத்து.
கலைஞர் உரை:
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆதலால்) இல்லற நெறியின் வரம்புக்கு மீறிய வேறு குற்றங்களைச் செய்துவிட்டாலும் இன்னொருவனுடைய வரம்புக்கு உட்பட்டவளான அவன் மனவிையுடன் காம இன்பத்தை விரும்பாதிருக்கும் ஒரு நல்ல காரியமே நல்ல அறமாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் அறத்தினைத் தனக்கு உரித்தாகச் செய்யாமல் புறம்பான தீமைகளையே செய்பவனானாலும், பிறனுடைய உரிமை எல்லைக்குள் இருப்பவளது பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் அறச்செயல்களைச் செய்து பெருமைபடா விட்டாலும், பிறன் மனைவியை எண்ணிப் பார்க்காத நல்லொழுக்கம் காத்து வாழ்தல் நன்று.
Translation
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not.
Explanation
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.
Transliteration
Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal Penmai Nayavaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 150