|
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.
நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நாமநீர் வைப்பின் - அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; நலக்கு உரியர் யார் எனின் - எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார்.
நாமம் அச்சம் இஃது உரிச்சொல். அகலம் , ஆழம் , தீயவுயிர்கள், கொந்தளிப்பு , நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். 'நலத்திற்கு' என்பது அத்துச் சாரியை தொக்கு நின்றது. 'தோள் தோய்தல்' இடக்கரடக்கல்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்
பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட மன உறுதியுள்ளவர்கள் உலகத்தில் வெகு சிலரே. அதனால் இந்தக் குற்றம் உலகத்தில் அச்சமுண்டாக்கத்தக்கதாக இருக்கிறது. அப்படி) அச்சந்தரக்கூடியதாக உள்ள இந்த உலகத்தில் மெச்சத் தகுந்தவர்கள் யாரென்றால், இன்னொருவனுடைய மனைவியைக் காம ஆசையினால் தீண்டாதவர்களே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அச்சம் தருவதாகிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரியவர்கள் யாரென்றால், பிறனுக்கு உரியவளது தோள்களை அணையாதவர்கள் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இவ்வுலகில் கனவிலும் கூட பிறன் மனைவியின் தோளைத் தழுவிச் சுகம் பெற நினையாதாரே வாழ்வில் எல்லா நலன்களுக்கும் உரியவராவார்.
|
|
Translation
|
|
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.
|
|
Explanation
|
|
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.
|
|
Transliteration
|
|
Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin
Pirarkkuriyaal Tholdhoyaa Thaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|