Thirukural

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம். (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம். இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சான்றோர்க்கு - அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன்மனை நோக்காத பேராண்மை அறன் ஒன்றோ - பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ ; ஆன்ற ஒழுக்கு - நிரம்பிய ஒழுக்கமுமாம். புறப் பகைகளை வெல்வதினும் அகப் பகைகளை வெல்வதே அருமையாதலின் , அறுவகை உட்பகைகளுள் ஒன்றாகிய காமத்தை அடக்குவதைப் பேராண்மை என்றார். ஒன்றோ என்பது ஒன்று தானோ என்று பொருள்படுவதாம். பிறன்மனை நோக்காமை பிறர்க்குச் சிறந்த அறமாயினும் சான்றோக்கு இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து. எச்சவும்மை தொக்கது.
கலைஞர் உரை:
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு யோக்கியர்கள் உறுதியை, கண்ணெடுத்தும் பார்க்காத தங்களுடைய தர்மமாகக் கொள்வார்கள். அது மட்டுமல்ல; அவர்களுடைய ஒழுக்கமே அதுதான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறன் மனைவியை உள்ளத்தில் நினைக்காத பெரிய ஆண்தன்மை சான்றோர்களுக்கு அறமும் ஆகும்; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.
தமிழ்க்குழவி உரை:
பிறன் மனைவியை விரும்பி ஏறிட்டும் நோக்காத பெரும் பண்பு, அறவிழுமியங்களுள் மிகச்சிறந்த ஒழுக்க நெறியாகும்.
Translation
Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life.
Explanation
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
Transliteration
Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku Aranondro Aandra Vozhukku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 148