Thirukural

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)
மணக்குடவர் உரை:
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
எளிது என இல் இறப்பான் - பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்தொழுகுபவன் ; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன்குடிப்பழியையும் அடைவான். 'இல்லிறப்பான்' என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது.
கலைஞர் உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
செல்வத்தாலும் செல்வாக்காலும் இந்தக் குற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் அதன் விளைவு.) எளிதாகக் கிடைக்கிறதென்று இலேசாக மதித்துப் பிறனுடைய மனைவியிடத்துக் கொண்ட காம ஆசையினால் நெறி கடந்து நடந்து கொள்ளுகிறவன், என்றும் நிலைக்கக்கூடிய பழியை அடைவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறகு நடப்பதை அறியாமல் எளிமையானதென்று நினைத்துப் பிறனுக்குரிய இல்லாளிடத்தில் நெறிகடந்து செல்லுகிறவன் எக்காலத்திலும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியினை அடைவான்.
தமிழ்க்குழவி உரை:
எளிதாகக் கைகூடும் எனக்கருதி பிறருடைய மனைவியை விரும்பித் துய்க்க எண்ணுபவனை என்றுமே அழியாது நிற்கின்ற பெரும்பாவம் பற்றித் தொடரும்.
Translation
'Mere triflel' saying thus, invades the home, so he ensures. A gain of guilt that deathless aye endures.
Explanation
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
Transliteration
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum Viliyaadhu Nirkum Pazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 145