|
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?
பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எனைத்துணையர் ஆயினும் - எத்துணை உயர்ந்தோராயினும் ; தினைத்துணையும் தேரான் பிறன் இல்புகல் - தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்; என் ஆம் - என்ன பயனுடைத்தாம்?
உயர்ந்தோர் அரசனும் தலைமையமைச்சனும் படைத்தலைவனும் போலப் பதவியிற் சிறந்தார். தேரான் என்பது தேர்வான் என்னும் உடன்பாட்டு எதிர்கால வினையெச்சத்தின் எதிர்மறை. எத்துணை உயர்ந்தோனாயினும் குற்றங் குற்றமே யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல்,
பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(யாரானாலும்) சிறிதேனும் எண்ணிப் பார்க்காமல் இன்னொரு வனுடைய மனைவியின்மேல் காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுழைகிறவன் வேறு என்ன சிறப்புடையவ னானாலும் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தினையளவும் தமது குற்றத்தினைக் காம மயக்கத்தினால் நினையாமல் பிறன் இல்லத்தில் புகுவோர் எவ்வளவு பெருமையுடையவராக இருந்தாலும் என்ன? யாதொரு பயனுமில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தினையளவேனும் எண்ணிப்பார்க்காமல் பிறன்மனைவியை விரும்பும் பேதையர், வாழ்வில் எத்தகைய சிறப்புகளை உடையவராக இருந்தாலும் யாவும் வீணே எனலாம்.
|
|
Translation
|
|
How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife.
|
|
Explanation
|
|
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?.
|
|
Transliteration
|
|
Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum
Theraan Piranil Pukal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|