Thirukural

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துதொழுகு வார்.

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற - உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர் . உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல்.
கலைஞர் உரை:
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதிலும்) தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பி யலைகிற ஒருவன் செத்த பிணத்துக்கு ஒப்பான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிருடையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
நட்பு பூண்டு வாழும் ஒருவருடைய மனைவியின்பால் விருப்பம் கொண்டு தகாதன செய்ய முனையும் மனிதர் உளரேல் அவரை இறந்தவரின் வேறானவர் அல்லர் எனலாம்.
Translation
They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise.
Explanation
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
Transliteration
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril Theemai Purindhu Ozhuku Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 143