|
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற - உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர் .
உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல்.
|
|
கலைஞர் உரை:
|
|
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்
ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதிலும்) தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பி யலைகிற ஒருவன் செத்த பிணத்துக்கு ஒப்பான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிருடையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நட்பு பூண்டு வாழும் ஒருவருடைய மனைவியின்பால் விருப்பம் கொண்டு தகாதன செய்ய முனையும் மனிதர் உளரேல் அவரை இறந்தவரின் வேறானவர் அல்லர் எனலாம்.
|
|
Translation
|
|
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.
|
|
Explanation
|
|
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
|
|
Transliteration
|
|
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|