|
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்.
பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உணலினும் உண்டது அறல் இனிது- மாந்தர்க்கு உணவுத்துறையில், பின்னுண்பதினும் முன்னுண்டது செரித்தல் இன்பந்தருவதாம்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோல அவர்க்குக் காமவின்பத் துறையில் , மேற்புணர்வதினும் முன்னைத் தவறுபற்றி மகளிரூடுதல் இன்பந்தருவதாம்.
பசித் துண்ணுமிடத்து இன்சுவைத்தும் மிகவுண்ணலுமாயிருத்தல்போல், ஊடலாற் பிரிந்து கூடுமிடத்துப் பேரின்பத்தும், ஆராமையுள்ளது மாயிருக்குமென்று தன் பட்டறிவு கூறியவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அடுத்தடுத்து உண்ணாமல் முன்னே உண்ட உணவு சீரணிக்கும்வரை மறுபடியும் உண்ணாமலிருப்பதே ஆரோக்கியத்துக்கு அவசியமானது போல, அடுத்தடுத்துப் புணராமல் முன் புணர்ந்த அலுப்புத் தீரும்வரை மீண்டும் புணராமல் பிரிந்திருப்பதே காம இன்பத்துக்கு அவசியமானது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோல் காமத்திற்குப் புணர்தலைவிட ஊடலின்பம் சிறந்ததாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உணவு உண்பதை விட, உண்ட உணவு செரித்து விடுதல் நன்று. அது போலத் தான் கூடி மகிழ்தலினும் ஊடல் இனிதானது.
|
|
Translation
|
|
'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.
|
|
Explanation
|
|
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
|
|
Transliteration
|
|
Unalinum Untadhu Aralinidhu Kaamam
Punardhalin Ootal Inidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|