|
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிலத்தொடு நீர் இயைந்த அன்னாரகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலரொடு புலத்தல் போல்; புத்தேள் நாடு உண்டோ- நமக்கு இன்பந்தருவதொரு தேவருலகம் எங்கேனு முண்டோ? இல்லை.
நீர் தான் சேர்ந்த நிலத்தொடு கலத்தல் மட்டுமின்றி அதனியல்பால் திரிதலும் போல, காதலருந் தாம் கூடிய மகளி ரியல்பின ராகலான் அதுபற்றி அவரொடு புலவி நிகழுமென்பாள் ' நிலத்தொடு நீரியைந் தன்னாரகத்து ' என்றும், அப்புலவி பின்னர்ப் பேரின்பம் பயக்குமென்பாள் புலத்தலிற் புத்தேணா டுண்டோ என்றும், கூறினாள். ' கூடிய மகளிரியல்பின ராதலென்பது இங்குந் தலைமகள் கருதுகோளேயன்றி உண்மையாக நிகழும் நிகழ்ச்சியன்றென வறிக.
|
|
கலைஞர் உரை:
|
|
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நிலவளமும் நீர்வளமும் ஒன்றுக்கொன்று குறையாமல் சேர்ந்தது போல் மனமொத்த காதலனும் காதலியும் சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தைப் போன்ற இன்பம் தேவலோகத்திலுங் கூடக் கிடைக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்ற ஒற்றுமையுடைய காதலரிடத்தில் புலந்து கொள்ளுவதைப் போல நமக்கு இன்பம் தருவதொரு புத்தேள் நாடு உண்டோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிலத்தோடு நீர் கலந்தாற் போல அன்பு கொண்டவர்கள் ஊடல் கொள்ள பெருகும் அவ் இன்பத்தைவிட அதிக இன்பம் தரும் உலகம் வேறு உள்ளதா?
|
|
Translation
|
|
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?.
|
|
Explanation
|
|
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.
|
|
Transliteration
|
|
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu
Neeriyain Thannaar Akaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|