Thirukural

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
(பிரிதற் குறிப்பினனாகிய தலைமகனோடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குச் சொல்லியது .) உள்ளக் களித்தலும்-நினைத்தவளவிலேயே உள்ளங் கிளர்தலும் ; காண மகிழ்தலும்-கண்ட வளவிலேயே இன்புறுதலும் ; காமத்திற்கு உண்டு கள்ளுக்கு இல்-காம நுகர்ச்சிக்குரிய காதலன்(அல்லது காதலி)பற்றி யுண்டாகும், கடிப்பிற்குரிய கள் பற்றி யுண்டாகா. ஆதலாற் காதலன் முன்பு புலப்ப தெங்ஙனம் என்பதாம் . களித்தல் கள்ளுண்டு மகிழ்ச்சியடைதல் ; மகிழ்தல் கள்ளுண்டு வெறித்து இன்புறுதல் . இவ்விரண்டும் உண்டாலன்றி யின்மையின் ' கள்ளுக்கில்' என்றாள் . ' உண்டு' என்பது முன்னுஞ் சென்றியைதலால் இறுதிவிளக்கு . இதை ஒர் அணியாகக் கொள்வர்.
கலைஞர் உரை:
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
சாலமன் பாப்பையா உரை:
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலி தன் தோழியிடம் சொல்லிக்கொள்கிறாள்:) நினைக்கும்போதே வெறி மூட்டும் குணமும் கண்டவுடனே மகிழ்ச்சியுண்டாக்கும் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்துக்கே உண்டு. (கள்ளைக் கண்டால் அருவருப்பே உண்டாகும்; காதலரைக் கண்டால் மகிழ்ச்சி வருகிறது).
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நினைத்த பொழுதே களிப்படைதலும் கண்டவுடனே மகிழ்ச்சியுறுதலும் கள்ளுண்பார்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு.
தமிழ்க்குழவி உரை:
நினைத்த பொழுதில் களித்தலும், கண்ட பொழுதில் மகிழ்தலும் ஆகிய தன்மைகள் கள்ளுக்கில்லை. காதலுக்கு உண்டு.
Translation
Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight.
Explanation
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
Transliteration
Ullak Kaliththalum Kaana Makizhdhalum Kallukkil Kaamaththir Kuntu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1281