Thirukural

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)
மணக்குடவர் உரை:
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.
தேவநேயப் பாவாணர் உரை:
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக. தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.
கலைஞர் உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.
சாலமன் பாப்பையா உரை:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலன் மனைக்குத் திரும்பியதும் காதலியின் நிலைமையை உணர்கிறான்.) நீ சொல்லாமல் மறைத்தாலும் அதை மறுத்து உன்னுடைய கண்கள் உன்னை மீறி என்னிடத்தில் சொல்லுகிற சேதி ஒன்று இருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நீ சொல்லாமல் மறைத்தாயானாலும் அதனைக் கடந்து உன்னுடைய மையுண்ட கண்கள் எமக்குச் சொல்லும் செய்தியொன்று இருக்கின்றது. இனி அதனை நீயே தெளிவாகச் சொல்லுவாயாக.
தமிழ்க்குழவி உரை:
தலைவியே நீ கூறாமல் மறைத்தாலும், உன் மையுண்ட கண்கள் காதலர்க்கு உரைப்பதற்கென்று செய்தி ஒன்று உண்டு.
Translation
Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not, what, would utter of complaint.
Explanation
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
Transliteration
Karappinung Kaiyikan Thollaanin Unkan Uraikkal Uruvadhon Runtu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1271