Thirukural

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சாலடக்கப் படுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் என ஒன்று கண் இன்று- காமமென்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்ட மில்லதாயிருந்தது; யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும்- எல்லாருந் தொழில் நீங்கித் தூங்கும் நள்ளிரவிலும் என் உள்ளத்தை ஏவல் கொள்ளும். தன்னைத் தோற்றுவித்ததனால் தாய்போலுள்ள நெஞ்சத்தையே ஏவல் கொள்ளும் துணிவுடைமை பற்றிக் 'காமமெனவொன்று' என்றும், தகாதநேரத்திலும் வேலைவாங்குதலால் 'கண்ணின்று' என்றுங் கூறினாள்; தொழிலாளுதலாவது தலைமகன்கண் செலவிடுத்தல். 'ஓ' இரக்கக் குறிப்பு.
கலைஞர் உரை:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
இரக்கம் என்பதே இல்லாமல் நடுராத்திரியிலும் இந்தக் காமவேதனை என் மனத்தை ஆண்டு அடிமை கொள்ளுகிறதே! எனக்கு இதுதானா வேலை?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எல்லோரும் தூங்குகின்ற பாதி இரவிலும் எனது நெஞ்சத்தினைத் தொழிற்படுத்தி ஆட்சி செய்கின்றது; ஆதலால் காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று இரக்கமில்லாததாக இருக்கின்றது.
தமிழ்க்குழவி உரை:
காதல் என்கிற அடக்க முடியாத உணர்வு இரக்கமேயன்றி நள்ளிரவுப் பொழுதிலும் என்னை ஆட்டிப்படைக்கின்றது.
Translation
What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in the midnight hour.
Explanation
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
Transliteration
Kaamam Enavondro Kannindren Nenjaththai Yaamaththum Aalum Thozhil

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1252